Tuesday 28 October 2014

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?


பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.

அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...

காட்சி-1

முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!

வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!

முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!

வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!

முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?

வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!

முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?

வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!

முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!

வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!

காட்சி- 2

பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!

பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...

பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன்  ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!

பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!

பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?

பதிவர் - 04 : பட்டென்று வந்து
             சட்டென்று படித்து
             நறுக்கென்று கருத்திட
             வழி விடாமல் எவர் மீதும்
             பழி போடாதீர்கள்!

பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
             பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
             கட்டுப்பாடு ஏதுமின்றி
             கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
             கருத்துப் (Comments) போட எவருமில்லையே!

பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!

பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!

பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.

பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...

பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...

பதிவர் - 05 : எவ்வளவுக்கு  எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு  அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!

மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments)  என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.

முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!

Saturday 25 October 2014

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.


  1. கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.
  2. அச்சு இதழ்களில் வெளியிடுவது.
  3. மின் இதழ்களில் வெளியிடுவது.
  4. முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.
  5. சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.
  6. சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.
  7. சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.
  8. அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.


மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.

Friday 24 October 2014

தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு


"முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் - அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்
(http://tamilnanbargal.com/node/38552)
நண்பர் இழவழுதி
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...
இது
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல
உலகெங்கும் வாழும் தமிழருக்காக
எழுதப்பட்டது என்பேன்!
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
வாழ்ந்த தமிழர் - என்றோ
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...
"தமிழாய் நிமிர்ந்திடு
தமிழனாய் வாழ்ந்திடு" என்று
நண்பர் இழவழுதி சொல்வதில்
தப்பில்லைக் காணும்!

தமிழரின் ஒற்றுமையின்மைக்கு
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்
ஒற்றுமையின்மையே ஆணிவேர்
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து
தமிழகத்தை மட்டுமல்ல
தமிழன் உலகையே ஆளலாம்
தமிழையே
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து
தமிழ் மக்கள் இடையே
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

Tuesday 21 October 2014

தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!


வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

Thursday 16 October 2014

மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!


மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) தாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்


Thursday 2 October 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!

Friday 26 September 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://www.box.com/s/exn2yefonnvoltly671v

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://online.fliphtml5.com/insb/ibao

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.


எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Tuesday 23 September 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

Sunday 21 September 2014

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

Wednesday 17 September 2014

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்

இன்றைய நுட்பங்களில் வலைப்பூக்கள் சிறந்த ஊடகங்களாக மின்னுகின்றன. சிறந்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் பலரது கைவண்ணங்களாலும் நாவண்ணங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. அது பலரைத் தமிழ்மணம் பேண ஊக்கமளிக்கிறது. அந்த வகையில் அடுத்தொரு முயற்சியாக வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள் பகிரப்படுவதனைக்  கருத்திற்கொள்ளலாம். இம்முயற்சி மேலும் வலைப்பதிவர்களின் செயற்றிறனைப் பெருக்கிக்கொள்ளப் பின்னூட்டியாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

இம்முயற்சியைத் தொடக்கிவைத்தவர்களுக்குக் காலில் வீழ்ந்து வணங்கி யாழ்பாவாணன் வெளியீட்டகம் நன்றி தெரிவிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளுக்கு யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும். உலகெங்கும் தமிழைப் பேண வலைப்பதிவர்களின் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கிறது. எனவே, வலைப்பதிவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாமும் மதிப்பளிப்பதையே விரும்புகின்றோம்.

உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் தம்பி ரூபன் அவர்களுக்குக் கீழ்வரும் அறிஞர்கள் விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

அறிஞர் விஜயா அம்மா அவர்கள்

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் வலைப்பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் யாழ்பாவாணன் வெளியீட்டகம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தம்பி ரூபன் அவர்கள் உங்கள் யாழ்பாவாணனுக்கும் தனது விருதுகளைப் பகிர்ந்துள்ளார். அவை பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும்  வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

Friday 12 September 2014

யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா?

நண்பர் கிங்ராஜ் தளத்தில்
http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_10.html
"ஒரு கடி" என்ற தலைப்பில்
“அந்தக் கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”
“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதுதான் ஆட்டம் அதிகம் இருக்கு”

என்றவாறு எழுதியிருந்ததைப் படித்ததும் இப்படி எழுத எனக்கும் தோன்றிச்சு! அதைக் கொஞ்சம் படித்த பின் கருத்துப் பகிர்வோமா...

நெடுநேரம் எண்ணிப் பார்தேன்
தென்னை மரம் ஏன் ஆடுது என்று
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்
அது தானே கள்ளையும் தருகிறது என்று

இப்படி நான் எழுதியதைப் படித்த பெரியோர் "யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடன்" என்பார்கள். உண்மையில் இதனைப் பாவரசர் கண்ணதாசன் தனது புத்தகமொன்றில் பதிவு செய்திருப்பதை படித்த பெரியோர் அறிந்தமையால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது. அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.

என்ன காணும் வலைப்பதிவு உலகில் யாழ்பாவாணன் தானே அடுத்தவர் பதிவை இடையிடையே புகுத்தி எழுதுகிறார்; இன்னும் பிறர் கண்ணில் சிக்கவில்லையா என்கிறீர்களா? அதற்கு முன் அங்கே படித்தேன்; அதில, இதில, உதில ஏட்டில் இருந்தது; அந்த, இந்த, உந்த இணைப்பில் இருந்தது என்றெழுதித் தப்பிக்கிறார் போலும்.

வலைப்பதிவர்களே! அடுத்தவர் பதிவுக் குறிப்புகளைத் தங்கள் பதிவுகளில் சான்றுக்காக இடையிடையே புகுத்தலாம். ஆயினும், புகுத்திய பதிவுக் குறிப்பை எழுதியவர் அல்லது வெளியிட்டவர் விரிப்பைச் சுருக்கிச் சுட்டியிருப்பின் இலக்கியத் திருட்டு இல்லை என்பேன். இல்லையேல் அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் வண்ணங்களில் வெளிப்படுத்த முன்வாருங்கள். எடுத்துக்காட்டாகப் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தை என் வண்ணத்தில் காட்டுகிறேன் பாரும்.
1
நல்ல நண்பர் வந்தார்
மெல்லத் தள்ளாடியே வந்தார்
சொல்லத் தடுமாறினார் - அவர்
மதுக்கடையில் இருந்து வந்ததை...
2
அங்குமிங்கும் ஆடும் பனையைப் பார்த்து
காற்றோடு பனை மரம் மோதுகிறதா
காற்றும் வேகமாய் அடித்து வீசுகிறதா
என்றெல்லாம் எண்ணிய பின்
பனையும் கள்ளைத் தருமெனப் படித்தேன்!
3
ஆடி ஆடித் தள்ளாடி வந்தால்
பாடிப் பாடிப் பாவாணனும்
அரை வயிற்றிற்கு உள்ளே தள்ளுவார்
நரைக் கிழவி விற்கும் குடிதண்ணீரென
என் காதலி
தன் தோழிக்குச் சொன்னாளாம்!

என் பாவண்ணத்தில் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தைப் படித்தீர்களா? நண்பர் கிங்ராஜின் கப்பல் கடியைப் படித்தீர்களா? எவரது எண்ணத்தையும் எவரும் தங்கள் கைவண்ணத்தில் எழுதலாம். அது இலக்கியத் திருட்டு அல்ல. அப்படி என்றால், வலைப்பதிவர்களே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்களேன்.

அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்து இலக்கியத் திருடனென்று பெயரெடுக்காமல், அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் கைவண்ணத்தில் ஆக்கிச் சிறந்த படைப்பாளி ஆக முன் வாருங்கள். இதற்குத் தான் பிறரது படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டுமென எனக்கு வழிகாட்டிய படைப்பாளிகள் சொன்னார்கள்.

Thursday 11 September 2014

சுகப்பிரியனின் சொல்லக்கூடாத உண்மை…


தமிழ்நண்பர்கள்.கொம் என்ற தமிழ்ப் படைப்புகளின் களம் என்ற வலைத்தளத்தை எவரும் மறக்க முடியாது, தமிழ்நண்பர்கள்.கொம் ஒரு தானியங்கித் திரட்டியும் கூட. நான் வலைப்பதிவர்களிடையே அறிமுகமாக அல்லது நானொரு வலைப்பதிவராக மின்ன தமிழ்நண்பர்கள்.கொம் தளமே பின்னூட்டி. நான் இன்றும் எனது வலைப்பூக்களில் வெளியிடும் பதிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் வெளியானவை தான். அந்த வகையில் 05/01/2012, வியாழன், - 10:49am அன்று வெளியான அறிஞர் சுகப்பிரியனின் "சொல்லக்கூடாத உண்மை…" என்ற கவிதைக்கு நான் வழங்கிய மதிப்பீட்டுப் பதிவை கீழே படியுங்கள்.

முதலில் அறிஞர் சுகப்பிரியனின் கவிதையிலிருந்து சில வரிகளைக் கீழே படியுங்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilnanbargal.com/node/37485

யாம் இருக்கப் பயமேன்
எடுத்து விடு நண்பா
பெண்களின் ஆடைகளில் உள்ள
பொட்டுக் கேட்டை மட்டுமல்ல
மக்களாய(சமூக)த்தின் பொட்டுக் கேட்டையும் தான்!
பெண்களே...
மக்களாய(சமூக)த்தின் கண்களே...
அருமையான அழகை பேணுங்கள்
ஆனால்
அழகற்ற உடலை அழகுபடுத்த
பொட்டுக்கள், வெட்டுகள் நிறைந்த
வலை போன்ற ஆடைகளை அணிவது
உங்கள் கற்புக்கு கேடு வருமே!
அடிப் பெண்ணே!
ஆள் பாதி ஆடை பாதி என்பது
ஆளின் அறிவை அழகுபடுத்துவது
அவ்வவ் ஆளின் செயல் பாதி
அவ்வவ் ஆள் அணியும் ஆடைகள் பாதி
(ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்)
என்றறிவீர்களா?
பிறந்த உடலை மூடிமறைக்க அமைத்த
ஆடைகளைக் கிழித்து
பிறந்த உடலைக் காட்டும்
போர்வை ஆக்கலாமா?
இத்தனை உண்மைகளை
அவிழ்த்துக் காட்டிய
அறிஞர் சுகப்பிரியனைப் பாராட்டுகிறேன்!
அறிஞர் சுகப்பிரியனின் கவிதையில்
பிறமொழிகள் புகுந்திருப்பது
தவிர்க்க இயலாத ஒன்றாயினும்
பிறமொழிச் சொல்களை
அடைப்புகளுக்குள் இட்டு - அதற்கான
தமிழ்ச் சொல்களை நேரடியாகப் பாவித்தால்
தூய தமிழ்க் கவிதையாயிருக்குமே!
சொல்லக்கூடாத உண்மை என்று
சொல்லிவைத்த அறிஞரின் எண்ணங்கள்
நடப்புக்காலத்தில் உலாவரும்
நம்ம பெண்களின் ஆடை வண்ணங்களும் - அதன்
அறுவடையாக எழும்
தமிழ்ப்பண்பாடு சீரழியும் நிலையுமே!
அறிஞர் சுகப்பிரியனின் பாடுபொருள்
நிறுத்துப் பார்க்கப்பட வேண்டிய
நல்ல படைப்புக்குச் சான்றாயினும்
இதைவிடச் சிறந்த படைப்புகளை
சுகப்பிரியனிடம் எதிர்பார்க்கிறேன்!

குறிப்பு: 05/01/2012, வியாழன், - 8:49pm அன்று தமிழ்நண்பர்கள்.கொம் இல் வெளியான " 'சொல்லக்கூடாத உண்மை…' என்ற பாவிற்கான திறனாய்வு http://tamilnanbargal.com/node/37497 " என்ற பதிவைச் சிறு மாற்றங்களுடன் மீழ்பதிவு செய்துள்ளேன்.

Friday 5 September 2014

தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு


தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தும்
பல நண்பர்களைப் பங்கெடுக்கச் செய்தும் உதவிய
எல்லோருக்கும் ரூபன் குழுவினர் சார்பில்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டி
முடிவு நாளை கொஞ்சம் நீடித்தால்
மேலும், பல உறவுகளை இணைக்க
வழிபிறக்கும் என்ற கருத்தை ஏற்று
இந்திய நேரப்படி 15/09/2014 நள்ளிரவு 12 மணி வரை
போட்டி முடிவு நாள் நீடிக்கப்படுகிறது!
மேலதிகத் தகவலைப் பெற:
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014_09_01_archive.html

தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்காதோர் பங்கெடுக்க வாருங்கள்...
இதுவரை பங்கெடுக்காத நண்பர்களைக் கூட
பங்கெடுக்கச் செய்து உதவலாம் வாருங்கள்...
உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் - மேலும்
பல போட்டிகளை நடாத்த ஊக்கம் தருமே!

Thursday 28 August 2014

தீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வரும்போது...

தீபாவளிக் கவிதைப் போட்டி அறிவிப்பை
01/08/2014 இல் பதிவர் ரூபன் பதிவுசெய்தார்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
உலகெங்கும் 12000 இற்கு மேல்
பதிவர்கள் இருக்கின்ற செய்தி அறிந்தேன்
அவர்கள் அத்தனை பேரும் போட்டியில்
பங்கெடுப்பார்கள் என நம்பியே
எனது எண்ணங்களை இப்படிப் பகிர்ந்தேன்...
01/08/2014 இல்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
03/08/2014 இல்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
08/08/2014 இல்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
23/08/2014 இல்
பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post_23.html
போட்டியின் முடிவு நாள் - அது
இந்திய நேரப்படி 01/09/2014 இரவு 12 மணி
இறுதி நேரம் வரை காத்திருக்காமல்
பதிவுகளை முன்கூட்டியே அனுப்பியோர்
போட்டியின் முடிவுகள் எப்படி இருக்குமென
எண்ணிப் பார்க்கையிலே
எத்தனை ஆயிரம் பேர்
போட்டியில் பங்கெடுத்தார்களென
நடுவர்கள் தெரிவிக்க இருப்பதை
நானும் அறியக் காத்திருக்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டியின்
முடிவுகள் வரும் போது - நானும்
நகைச்சுவைப் பதிவர்களை வெளிக்கொணர
ஐந்தடிக் குறும்பா (லிமரிக்) உடன்
நான்கடி உரையாடல் (ஸ்கிரிப்) நகைச்சுவை
இல்லாவிட்டால் பாரும்
சிறுகதைப் பதிவர்களை வெளிக்கொணர
75-100 சொல்களைக் கொண்ட கடுகுக்கதை
தைப்பொங்கல் நாள் போட்டி நடத்த
எல்லோரையும் தயார்ப்படுத்த எண்ணியிருக்கேன்!
ஆனால், அதற்கு முன்
நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி
முடிவு நாளுக்கு முன்னதாகவே
பல்லாயிரம் பதிவர்களை அழைத்து
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்கச் சொல்லிவிடுங்கோ!
போட்டிகள் யாவும்
வலைப்பூக்களில் தமிழைப் பேணவும்
உலகெங்கும்
தமிழை வாழ வைக்கவுமே!

Wednesday 27 August 2014

தமிழகப் பழைய இதழ்கள், பத்திரிகைகள்

படைப்பாளிகள் பலரும்
படித்தே ஆக வேண்டிய பதிவு
எழுதுகோல் ஏந்தியோர் எழுத்தாளராக
எழுதியோர் பதிவுகளைப் படித்தே
ஆக வேண்டுமே - ஏனெனில்
பாரதியின் சுதேசமித்திரன் பயணம்
பலருக்குத் தெரியாதே!
பழைய இதழ்கள், தினசரிகளின் கண்காட்சி பற்றி
அறியத் தந்த அறிஞரின் பதிவைப் பாருங்க...
ஊடகங்களின் கதை கூறி
பதிவர்கள் தெரிந்திருக்க வேண்டிய
தகவலும் தொகுத்தே தந்துள்ளார்!
பத்திரிகைகள், தினசரிகள் பற்றிய குறிப்புகள்
பதிவர்களுக்கு மட்டுமல்ல
ஊடகத்துறை சார்ந்த எல்லோரும்
அறிந்திருக்க வேண்டிய ஒன்றே!
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
மேலும் அறிவைப் பெருக்குங்கள்!

OLD IS GOLD - சென்னைப் பட்டினத்தில் 
பத்திரிகைக் கலாசாரக் கண்காட்சி


Wednesday 20 August 2014

எழுது எழுது எழுது

எண்ணியதெல்லாம் எழுது - அது
எந்த இலக்கியம் என்று கேளாமலே...
அட, இலக்கியம் என்றால்
என்ன என்று கேட்கிறீரோ...
வாழ்ந்த, வாழும்
நம்மாளுகளின் வாழ்வை
படம் பிடித்துக் காட்டுவதே
இலக்கியம் என்கிறார்களே...
எழுது எழுது எழுது
எழுதப் புகுந்தால்
வாசிப்பது, எவர் என்று கேட்கிறீரோ...
அடடே, உன் எழுத்தால்
வாசிப்பவர் உள்ளத்தை
மகிழ்வடையச் செய்வாய் எனின்
மகிழ்வடைவதற்காக வாசிக்கும்
எல்லோரும்
உன் எழுத்தை வாசிப்பார்களே...
எழுதிய பதிவை
எவர் வெளியிட வருவாரா...
உனது சொந்தப் பதிவாயின்
எல்லோரும் உதவுவார்களே...
எழுதத் தூண்டுபவை
எவை என்று கேட்கிறீரோ...
மக்கள் வாழ்க்கையை படி
பழைய, புதிய
இலக்கியவாதிகளின் நூலைப் படி
நல்ல திரைப்படத்தைப் பார்
இதற்கு மேலும் - உன்
தேடலைப் பெருக்கினால் போதாதா?
எழுதுவதால் மகிழ்வடையப் பார்
உன் எழுத்தைப் பார்த்து
மகிழ்வோரின் விருப்பறிந்து எழுது...
உன் உள்ளத்தில் எழும்
நல்லெண்ணங்களையோ
படித்தறிவையோ
பட்டறிவையோ
மதியுரையையோ
வழிகாட்டலையோ
நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க
எழுத்தாசிரியர் ஆகலாமே!
எண்ணியதெல்லாம் எழுது
அதனால்
நாட்டு மக்கள் - தங்கள்
அறிவைப் பெருக்குவார்களே!

Friday 15 August 2014

படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?


உறவுகளே! முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள். அடுத்து எனது பதிவைப் படிக்கத் தொடருங்கள்.
http://sivamgss.blogspot.com/2014/08/blog-post_69.html

என்னைப் பெத்தவளுக்குத் தான் தெரியும்
என்னை ஈன்ற போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
பாப் புனைந்தவருக்குத் தான் தெரியும்
பாப் புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
கதை புனைந்தவருக்குத் தான் தெரியும்
கதை புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
நடிகை, நடிகருக்குத் தான் தெரியும்
நடித்து முடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
சிற்பிக்குத் தான் தெரியும்
சிலையை வடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
மொத்தத்தில எண்ணிப் பார்த்தால்
பிள்ளையை ஈன்ற தாய் - தான்
பட்ட துன்ப துயரங்களைப் போல தான்
படைப்பொன்றை ஆக்கி முடிக்கையிலே
படைப்பாளி ஒருவரும்
பட்டிருப்பார் என்பதைக் கூட
படியெடுப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே!
"சின்ன வீடு தந்த சுகமிருக்கே - அது
காவற்றுறை தந்த கம்படியில
காணாமல் போயிட்டுதே!" என்று
எழுதியிருக்கிறியே
சின்ன வீட்டை நாடி
காவற்றுறையில சிக்கினதை எழுதினால்
உன்னை எவர் மதிப்பாரென
நண்பர் ஒருவர் கேட்க - அது
யாழ்பாவாணன் எழுதியது - நானோ
படியெடுத்துப் பகிர்ந்தேன் என்று
படியெடுத்தவர் பகிரும் போது தான்
பதிவின் உண்மைத் தன்மை அறியாதவர்
எல்லோரும் இப்படித்தான் சிக்குவாரென
அறிய முடிகிறதே! - நான்
கட்டிய மனைவியின் சுகத்தை விட
சின்ன வீட்டின் சுகம் கேடென எழுதியதை
வெளிப்படுத்த முடியாதமையால்
படியெடுத்தவர் சிக்கினார் என்பதைச் சொன்னேன்!
படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?
படியெடுத்துப் பகிர்ந்ததை விளக்க முடியாமலா?
இதழியல், ஊடகவியல் பற்றி
எள்ளளவு தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன்
படியெடுத்துப் பகிர்வதற்குச் சட்டமில்லை
குற்றம் என்று உரைக்கின்றேன்...
எவருடையதெனச் சான்றுப்படுத்தி
எதற்காகப் பகிருவதாகச் சுட்டி
படியெடுத்துப் பகிரலாம் என்பதையும்
எல்லோரும் ஏற்பீர்களென
நானும் நம்புகின்றேன்!


Thursday 24 July 2014

விளம்பரங்கள் வடிவமைக்கலாம் வாங்க...


"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா?

மறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா? விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே!

எப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.

விளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.

மக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.

விளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா? கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.

Sunday 20 July 2014

யாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க!

என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். "கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.

1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே! இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.

இன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.

இவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே! ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.

இன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா? அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.

இவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக "யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பாருங்கள்.


Friday 18 July 2014

புதிய வலைப்பதிவர்களே! கொஞ்சம் கேளுங்கோ...

புதிய வலைப்பதிவர்களே! உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

கூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.

வலைப்பூவை தயாரித்தாச்சா? பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா? இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.
புளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.

அடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.

நண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.

Tuesday 15 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 06

கடற்காற்றோடு கலந்து வீசிய
அயலாள் பெருமாள் வீட்டு
"ஐயோ! அம்மோய்!" என்றழுகை
பைங்கிளி வீட்டிற்குள் நுழைய
வேலனும் பொன்னனும் வேளைக்கே
பெருமாள் வீட்டிற்குள்ளே இறங்க
பெருமாளுக்கு உடம்பு சரியில்லையென
பெண்டாட்டி போட்ட கூப்பாட்டிலே
கடற்கரையூரும் திரண்டு நின்றதே!

திரண்டு நின்றவர்களோ சொன்னார்கள்
முரண்டு பிடிக்காமல் செல்லுங்கள்
உடனேயே மருத்துவ மனைக்கென
உடனே வேலனும் பொன்னனும்
நம்ம பைங்கிளி இருக்க
சும்மா எங்கேனும் போகணுமா?
எங்கேயும் போகவும் வேண்டாம்
இங்கேயே பைங்கிளி வந்திட்டாளென
வந்துகொண்டே பெத்தவள் சொன்னாளே!

எங்கட பெருமாளுக்கு என்னவாச்சு
உங்கட பைங்கிளி வந்தாச்சென
பைங்கிளியைப் பெத்தவள் விசாரிக்க
பெருமாளும் நடந்ததைச் சொல்ல
பைங்கிளியோ கைநாடி பார்த்தாள்
ஏதோ காதுக்க செருகியவள்
பெருமாளின் நெஞ்சில முதுகில
வைத்துச் சோதித்துப் பார்த்தாள்
மருந்தையும் பருக்கியும் விட்டாளே!

திரண்ட கடற்கரையூரார் கண்டது
பைங்கிளியின் மருத்துவப் பணியா
பைங்கிளியாள் குடும்பத்தார் நற்குணமா
என்னமோ மருத்துவர் பைங்கிளியா
கடற்கரையூரின் கலங்கரை விளக்கா
பைங்கிளி மணமாகி விட்டாளா
பைங்கிளியின் மணமகன் நம்மூரா
பிறவூரானுக்குக் கழுத்தை நீட்டுவாளா
கடற்கரையூரார் வாய்கள் ஓயாதோ?
(தொடரும்)

Friday 11 July 2014

காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு


விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)
என்பது
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சு!
என்பது
'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை!
மேலுள்ள விரிப்பைப் பார்வையிட
கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://avargal-unmaigal.blogspot.com/2014/07/blog-post.html

மதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.

சரி! உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு! பின்னூட்டத்தில்  தெரிவிக்க மறந்து விடாதீர்கள்! என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.

படத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே! அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே! அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.

படத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை புலப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம் என்பதே! மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ! அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.

இந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே! வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும்! இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.

அப்படியாயின் உண்மைக் காதல் எது? காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்!

காதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை "பத்திரிகைச் செய்திகளே! http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html " என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.

"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)" என்ற
மதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)!

Thursday 10 July 2014

ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்


அன்று;
நான் பிறக்கும் முன்
எனது யாழ்ப்பாணத்தில்
ஒர் எழுத்துப் பிழைக்கு
ஒரு "25 சதம்" வழங்கியது
ஒரு பத்திரிகை நிறுவனம்!
வாசிப்பதும்
பிழை பிடிப்பதும்
அறிவைப் பெருக்குவதும்
பணம் ஈட்டுவதும்
அன்றைய
வாசகரிடமும் இருந்ததே!
இன்றைய பத்திரிகைகள்
எழுத்துப் பிழைகளால்
நிரம்பி இருந்தாலும்
வாசகரும் பொருட்படுத்துவதில்லை
பத்திரிகை ஆசிரியரும் கவனிப்பதில்லை
எங்கட பிள்ளைகள் தான்
முட்டாள் ஆகின்றனரே!
நாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,
சிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்
எழுத்துப் பிழைகளோடு தான்
கடைத் தெருக்களில் தொங்குகின்றன
சில தொங்கினாலும்
திறந்து படிக்க இயலாதவாறு
கண்ணாடித் தாள்களால் மூடப்பட்டிருக்கும்
விரும்பியோர்
வேண்டிப் படிக்கலாம் என்று தான்!
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்
நிகழ்ச்சி நடத்துறாங்க
கண்டுக்க யாருமில்லையா?
விரும்பியோர்
கேட்கலாம்; பார்க்கலாம் என்றா
நடத்துறாங்க!
ஆயிரத்திற்கும் மேலான - தமிழ்
வலைப்பூக்கள் (Blogs) உள்ளனவாம்
உண்மையில் எத்தனையோ
எழுத்துப் பிழைகளோடு தான்
உலாவி வருகின்றனவாம்
உலாவும் கருத்துபதிவரும்
கண்டு கொள்ளாமையால்
எழுத்துப் பிழைகள் மலிந்த
வலைப்பூக்கள் உலாவ வழியாயிற்றோ!
நல்ல ஊடகங்களின் சிறப்பு
எழுத்துப் பிழைகளற்ற வெளியீடே...
வெளியீட்டின் பின் எண்ணி
எழுத்துப் பிழைகள் சீராகாது
வெளியீட்டின் முன் பண்ணி
எழுத்துப் பிழைகள் வாராது
ஊடகக்காரர் தான் பாருங்கோ
எங்கட பிள்ளைகள் முட்டாளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டுமே!



Sunday 6 July 2014

மூளைக்கு வேலை தரும் வலைப்பூ

யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா? சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.

“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் "சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்." என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66
அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

சரி! கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.

ஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

இனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.
முதலில் "காதலில் உண்மை உண்டா?" என்ற பதிவைப் படியுங்க:

''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''என்னான்னு?''
''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் !''
http://www.jokkaali.in/2012/11/blog-post_14.html

பொய் சொல்லுற காதலன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து "வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது?" என்ற பதிவைப் படியுங்க:

''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப்  பிடிக்குதா?''
''வீடா இது? பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_17.html

அறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே "To Let" க்குப் பதிலாக "Toilet" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.

அடுத்து "நகை உனக்கு! நங்கை நீ எனக்கு!" என்ற பதிவைப் படியுங்க:

''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_21.html

அறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்து "ரோஜாக்கள் ஜாக்கிரதை!" என்ற பதிவைப் படியுங்க:

"ஜாக்கிரதை!" என்ற தலைப்பில்
"ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம்!" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.
http://www.jokkaali.in/2012/11/blog-post_462.html

அறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.

அடுத்து "ASH TRAY கேள்விக்கு பதில் ஏது?" என்ற பதிவைப் படியுங்க:

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY!
http://www.jokkaali.in/2012/12/ash-tray.html

இதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY!) கேட்கையில் சிரிப்பு வருகிறதே! அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே!

அடுத்து "அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்?" என்ற பதிவைப் படியுங்க:

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க!''
http://www.jokkaali.in/2013/12/blog-post_24.html

படித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.

அடுத்து "தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்?" என்ற பதிவைப் படியுங்க:

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா!''
http://www.jokkaali.in/2013/11/blog-post_11.html

இன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து " 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்?" என்ற பதிவைப் படியுங்க:

''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே!''
http://www.jokkaali.in/2013/11/blog-post.html

இன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.

இறுதியாக "காதலன், காதலி என்றால் ஓகே!" என்ற பதிவைப் படியுங்க:

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
கள்ளச் சாவிகள் தான்!
http://www.jokkaali.in/2013/05/blog-post_28.html

திரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ? கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

மேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா? இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று! எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.

நகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.

என்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே!

முடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.

Thursday 3 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 05

ஆற்றங்கரையூராரின் ஒற்றுமையைக் கண்டு
அயலூராரிற்கும் இருப்புக் கொள்ளாது
அன்றொரு நாள் ஆங்கே
ஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில
பொன், பணம் பொறுக்கிய திருடனை
அன்னக்கிளி போட்ட கூப்பாட்டில
ஊரேகூடி நின்று பிடிச்சிட்டாங்க!

ஊரேகூடி வருமுன்னே - அங்கே
ஐங்கரன் வீட்டு நாயெல்லோ
அன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க
கள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த
ஊராருக்கு விளங்கிப் போச்சுதே
காசுக்கு மேலே படுப்பவள் தானே
ஐங்கரன் வீட்டு அண்டையாளென்றே!

ஊர்கூடி வீட்டுநிலை பரப்புதென
கள்ளரைக் காவற்றுறையில கொடென
அன்னக்கிளி மதியுரை கூறவே
ஐங்கரனும் நண்பர்களும் இறங்க
வைப்பகங்களில வைச்சதாலே தானே
கள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே
வீட்டிற்கு உள்ளே தேடியலைய
என்காதுக்கெட்ட நானழுதேனே
நானழுவதைக் கேட்ட நாய்களே
கள்ளரைக் கடித்ததென்றாள் அன்னக்கிளி!

ஆற்றங்கரையூராரின் களவுச் செய்தி
நாளேட்டில வெளிவந்ததைப் படித்த
உறவுக்காரங்க நேரே வந்தாங்க
வைப்பகங்களில வைக்காட்டித் தாவேன்
எங்கட வீடுகளில வைக்கலாமென்றே
தங்கட எண்ணங்களைப் போட்டுடைக்க
என்னட்ட என்ன இருக்கென எண்ணி
கேட்கிறியளெனக் கேட்டாள் அன்னக்கிளி!

பொன், பொருள், பணம் வைத்திருப்போர்
பொத்திப் பொத்தி வைத்திருப்பரே
சொல், செயல், நடை கண்டே
கள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே
நன்நாள் அலங்கரிப்பு ஆளிட்டையும்
கஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்
கண்டுகொண்ட கள்ளர் இறங்கவே
ஊரறியுமே பணக்காரர் யாரென்றே!
(தொடரும்)

Tuesday 1 July 2014

பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!


நான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.

வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.

நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.

படைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே! அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு? ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவாரா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே! அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு? எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.

வாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே! ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.

நண்பர்களே! எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.

பதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. "பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!" என்ற தலைப்பில் இத்தனையும் "பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.

Tuesday 24 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 04


பைங்கிளி வாழும் ஊராம்
கடல் சூழவுள்ள ஊராம்
கடற்கரையூரைக் கடந்தாம்
பிள்ளை ஒன்று பெற்றுக்கொள்ள
அருள் தாரும் அம்மாவென
நாகபூசணி அம்மன் காலில் வீழும்
அடியார்கள் செல்லும் தீவாம்
நயினாதீவை அறிவீரா?

முன்தோன்றித் தமிழரெனும் நாகர்கள்
நாகத்தை வழிபட்ட முன்னோர்கள்
போற்றிய நாகநயினார், நாகதம்பிரான்
கோவில் கொண்ட ஊராகையால்
நாகநயினார்தீவு, நயினார்தீவு என்றும்
மின்னிய இந்துக் கோவில்களை
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் அழித்தனராம்!

முத்துக்குளித்தல் இருந்தாலும் கூட
சங்குகுளித்தல் விஞ்சிய கடலாம்
சூழவுள்ள நயினாதீவின் உள்ளே
தமிழரெனும் நாகர்கள் வழிவந்த
வள்ளுவர் மக்கட்குழாம் வழிபட்ட
நயினாதீவு நாகம்மாள் கோவிலாம்
பின்வந்த ஆங்கிலேயன் பின்னே
தலைநிமிர்ந்த தமிழர் கோவிலாம்!

யாழ்மண்ணின் பண்ணைக் கடலண்டி
தலைகாட்டும் தீவுகள் ஏழில்
புனிதமண்ணாம் நயினாதீவுக்குப் போவோர்
காணும் கடற்கரையூரில் வாழும்
கந்தப்புவுக்கும் செல்லாச்சிக்கும் வாய்த்த
பைங்கிளி மருத்துவராகப் படித்தாலும்
மூத்தவன் பொன்னன் விண்ணன்
கடலும் அங்காடியுமாகச் சுழல
இளையவன் வேலன் வணிகனாம்!
--தொடரும்--

Sunday 22 June 2014

வலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா?

உறவுகளே! ஊடகங்களைப் பொறுத்தவரையில் படைப்பை ஆக்குவோர் படைப்பாளி என்றும் படைப்பை மதிப்பீடு செய்வோர் திறனாய்வாளர் என்றும் படைப்பை படிப்போர் / வாசிப்போர் / கேட்போர் / பார்ப்போர் தான் படைப்பின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாசகர் எனலாம். வலைப்பூ ஊடகத்தில் வலைப்பதிவர், கருத்துப்பதிவர், வாசகர் ஆகிய மூவரையும் காணலாம்.

ஊடகங்களில் திறனாய்வுக்கும் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வுக்கும் இடையில் என்ன உறவு இருக்கும்? படைப்பை வாசகர் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கத் திறனாய்வு உதவுகிறது. படைப்பின் பயன், தரம், சுவை எனச் சுட்டி வாசகர் வாசிக்கத் தூண்டவும் படைப்பாளி சிறந்த படைப்பை ஆக்கத் தூண்டவும் திறனாய்வு உதவணும்.

வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) என்றாலும் இதே நோக்கில் தான் அமைய வேண்டும். ஊடகங்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்? வலைப்பூக்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  வாசகர் பார்வைக்கு வாசகரை நாடும் அல்லது வாசகருக்கு அண்மையில் உள்ள ஊடகங்களை நுகரும் வாசகர்களே ஊடகங்களில் காணலாம். ஆனால், வலைப்பூக்களில் ஒரு வலைப்பூப் பதிவருக்கு மற்றைய வலைப்பூப் பதிவரே வாசகராக இருப்பர். மாறாகத் தேடுபொறிகளூடாகத் (Google) தகவல் தேடுவோரும் வாசகராக இருக்கலாம்.

இந்நிலையில் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா? ஆம்! தேவைதான்! கருத்துப்பகிர்வைக் கண்ட பிறரும் குறித்த பதிவைப் படிக்க வாய்ப்பு அதிகம். ஆகையால், பதிவை வாசகர் பார்வையிடவும் குறித்த வலைப்பதிவர் சிறந்த பதிவுகளை ஆக்கவும் கருத்துப்பகிர்வு (Comment) உதவுகிறதே! எவர் தனது வலைப்பூப் பதிவுகளிற்கு அதிக கருத்துப்பகிர்வு (Comment) பெற்றிருக்கிறாரோ அவர் வலைப்பூப் பதிவர்களிடையே முன்னணிப் (பிரபல) பதிவராக மின்னுகிறார் என்று பொருள்கொள்ளலாம்.

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் தமது தளத்தில் பதிவிடுவதோடு நட்புக்காகப் பிற வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வதும் வழமை. ஆயினும், அறிவுப்பசி உள்ள வலைப்பதிவர்கள் இதற்கப்பாலும் சென்று பல வலைப்பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகச் சிறந்த பதிவைக் கண்டாலோ கருத்து முரண்பாட்டைக் கொண்ட பதிவைக் கண்டாலோ அதன்பால் விருப்புக் கொண்ட வலைப்பதிவர்கள் கருத்துப்பகிர்வதும் உண்டு.

ஆயினும், சில வலைப்பதிவர்கள் பிறர் தமது வலைப்பூக்களில் கருத்துப் பகிர்ந்தாலும் தாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப்பகிர முன்வருவதில்லை. நாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப் பகிருவதால் என்ன நன்மை? முதலில் நாம் சிறந்த கருத்தைப் பகிருவதால் எம்மை அடையாளப்படுத்துகிறோம். இரண்டாவது குறித்த வலைப்பதிவரை ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக பலரது வலைப்பூக்களுக்குச் செல்வதால் எமது வலைப்பக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டுகிறோம்.

எனவே, வலைப்பூக்களை நடாத்தும் நாம் தேடுபொறிகளூடாக (Google) வரும் வாசகர் படித்தால் போதும் என பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிராமல் இருப்பது தவறு என்பேன். நமது வலைப்பூக்களின் முதல் வாசகர் பிற வலைப்பதிவர்களே என்றுணர்ந்து பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிர்தலே நன்று என்பேன்.

கருத்துப்பகிரும் (Comment) போது எமது விளம்பரங்களைப் போட்டுத்தள்ள வேண்டாம். உங்கள் வலைப்பூக்களது பிந்திய பதிவின் இணைப்பை உங்கள் கருத்தின் கீழ் நுழைப்பதில் தவறில்லை. ஆயினும் குறித்த வலைப்பதிவரை நோகடிக்கும்படி கருத்துப் பகிர வேண்டாம்.

உங்களுக்கே தெரியும் முன்னணிப் பதிவர்கள் எல்லோரும் உங்கள் வலைப்பூவில் கருத்துப் பகிரும்போது "நல்ல பதிவுக்கும் பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்" எனத் தனது கருத்தின் கீழ் இடுவார்கள். அதேவேளை "இந்த இடத்தில் இப்படி வர வாய்ப்புண்டா? எனக்கேதோ தவறு போன்று தெரிகிறது. ஆயினும் தங்கள் பக்கத்தில் வேறு விளக்கங்கள் இருக்கலாம், அதுபற்றி எனக்கு விளக்கம் தாருங்கள்!" என்று வலைப்பதிவரைக் குத்திக் குதறாமல் நோகடிக்காமல் பிழை சுட்டுபவர்களும் உள்ளனரே!

எனவே வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான். தங்களை அடையாளப்படுத்தவோ தங்களது வலைப்பூக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டவோ பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று நடுநிலைமையுடன் (பதிவர் பக்கத்திற்கும் வாசகர் பக்கத்திற்கும் இடையே நின்று) பதிவை மதீப்பீடு செய்யலாம். குறித்த பதிவில் சுட்டப்பட்ட செயல்களை முன்மொழியப்பட்ட கருத்துக்களை மதீப்பீடு செய்யலாம். அதாவது தங்கள் கருத்து  வாசகர்களையும் பதிவரையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஆகக்குறைந்த சொல்களால் “சிறந்த பகிர்வு, பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள், சுவையான பதிவு” என்றவாறு கூட உங்கள் கருத்தைப் பகிரலாம். "எடே யாழ்பாவாணா" என்பதை "அடேய் யாழ்பாவாணா" என்று திருத்தி உதவுங்கள் எனப் பிழைகளையும் நோகாமல் சுட்டிக்காட்டலாம். எப்படியோ வலைப்பூக்களை முன்னணிக்குக் கொண்டுவரவோ பின்னுக்குத் தள்ளவோ நாம் வழங்கும் கருத்துப் பகிர்விலேயே (Comment) தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

Wednesday 18 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 03

வள்ளியப்பனுக்கும் (வள்ளிக்கும்)
வெள்ளியம்மாவுக்கும் (வெள்ளிக்கும்)
மூத்தவனாய்ப் பிறந்த ஐங்கரனும்
தம்பியாம் சுப்பனையும்
தங்கையாம் சுந்தரியையும்
படிக்க வைச்சான் தானும் படிக்கையிலே!

ஆற்றங்கரை ஊராக்களைப் போல
என்ன தான் படித்தாலும்
வேளான்மை செய்யும் குடும்பமானாலும்
ஊர்ப்பள்ளியில் ஐங்கரன்
கணினி ஆசிரியராக இருக்க
விடிகாலையிலும் பொழுதுசாய்கையிலும்
தன் தோட்டத்துப் பயிர்களையே கொஞ்சுவான்!

சுப்பனோ கச்சேரி எழுதுநராயும்
சுந்தரியோ தொடக்கப்பள்ளி ஆசிரியையாயும்
தேப்பனோட தோட்டமும் கையுமாயிருந்த
பள்ளிக்குப் போயறியா வள்ளியப்பனும்
வெள்ளியும் பத்துவரை படித்தாலும் கூட
வள்ளிக்குத் துணையாய் வந்ததும்
அடுப்பூதியும் அவிச்சுப் போட்டுமிருக்க
அறுவடை நாளன்று எல்லோருமாய்
தோட்டத்தில் வந்துகூடி வேலையும் செய்வரே!

அண்டையாள் அன்னக்கிளியும்
அயலாள் அப்புச்சாமியும்
எண்ணிப்பார்த்தால்
ஐங்கரன் வீட்டுச் சுற்றத்தார்
எல்லோருமே தோட்டத்திற்கு வர
வேளாண்மையும் அறுவடையும் நகர
ஆற்றங்கரையூர் ஒற்றுமையாய் வாழ
தொண்டைமானாறு கைகுலுக்குமே!

தொண்டைமானாற்றின் அயலூர்களான
கரணவாய், செம்மணி, வெள்ளைப்பரவை போன்ற
இடங்களில் தானே விளையும் உப்பை
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசருக்கும்
இந்தியாவை ஆண்ட தமிழரசருக்கும்
ஒற்றுமையும் நல்லுறவும் இருந்தமையால்
மரக்கலங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்த வரலாறுமிருக்கே!

சிற்றரசன் கருணாகரத் தொண்டைமான் என்பாராம்
தமிழ்நாட்டில் இருந்து வந்திங்கே
யாழ்ப்பாண அரசரின் அனுமதியோட தான்
உப்பு வணிகம் இலகுவாய்த் தொடரவே
பாக்கு நீரிணையோடு ஆறு இணையும்
முகத்துவாரத்தினூடே இருந்த
வல்லிநதி என்னும் நன்னீர் ஓடையை
வெட்டிக் கட்டியமைத்த ஆறாகையால்
வல்லைவெளி தாண்டிய வல்லிநதியே
தொண்டைமானாறானதும் வரலாறே!
(தொடரும்)

பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா?

                                     தமிழ்த் திரைப்பாக்கூடம்
                                      திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு

2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..

பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com

வகுப்பு   -       சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி    -        பத்தாம் வகுப்பு

மேலும் தொடர்புக்கு :    

தமிழ்த் திரைப்பாக்கூடம்   -  9566196747 ,  8056161139

Monday 16 June 2014

நேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு!


இலக்கியத்தில் கவிதை, கதை எனத் தனித்து எழுதுவோரும் பல துறைகளில் எழுதுவோரும் உள்ளனர். ஊடகங்களில் அவர்களை நேர்காணல் பகுதிக்கு அழைத்து கேள்வி மேல் கேள்வியால் துளைத்து அறிவைப் பிடுங்கிப் பரப்புவார்கள். இதனால் படைப்பாளி கூறும் நுட்பங்களை நாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. நம்மாளுகள் இவ்வுண்மையை அறியாமல் நேர்காணல் பகுதியைப் படிக்க நாடுவதில்லை. அப்படியானவர்கள் "அவரவர் தன் (சுய) அறிமுகமாக இருக்குமெனப் படிப்பதில்லை." என்பர்.

நேர்காணல் பகுதியில் "தங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?" என்ற கேள்வியைத் தான் எல்லோரும் கேட்பர். அதில் தவறில்லையே. அடுத்து "எவ்வாறு எழுத்துத்துறையில் காலடி வைத்தீர்கள்?" என்று கேட்பார்கள். அதிலும் தவறில்லையே. இதற்காகவே ஒரு படைப்பாளி தன் (சுய) அறிமுகத்தைத் தருகின்றார். நேர்காணலை மேற்கொள்பவர் வாசகர் படைப்பாளியை அடையாளம் காணவே இவ்வாறு கேட்க முனைகின்றார்.

படைப்பாளிகளில் இருபாலரும் உள்ளனர். ஆண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். பெண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். சிலர் இருபாலார் சார்பாகவும் எழுதுவர். வாசகர் விருப்பறிந்து எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றி பெற்ற படைப்பாளி ஒருவருடனான நேர்காணல் ஒன்றை 4பெண்கள் தளத்தில் படிக்க முடிந்தது. "இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்" என்ற தலைப்பில் வெளியான பதிவை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.

http://wp.me/p2IA60-1y5

Monday 9 June 2014

வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்


நான் 1987 இருந்து எழுத்துலகில் காலடி வைத்ததாலும் 25/09/1990 இலே எனது முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அதுபோல 1995 இல் கணனியைப் படித்தும் 2010 இலிருந்தே இணைய வழியாக எனது இலக்கியங்களை வெளிக்கொணர முயன்றேன். அப்படியிருந்தும் 2012 இலேதான் வலைப்பூப் பக்கம் தலையைக் காட்டியிருக்கிறேன். இந்த இழி நிலைத் தகுதியோடு மேற்காணும் தலைப்பில் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர முனைகின்றேன்.

வலைப்பதிவர்கள் வலைப்பூவை நடாத்தத் தொடங்கியதும் தமது பதிவுகளை இட்டு நிரப்பியதும் முடிந்துவிட்டதாக இருந்துவிட முடியாது. அப்பதிவினை வாசிப்போர் கண்ணுக்குக் காட்டிக்கொள்ள வேணடியிருக்கிறது. அதற்காக லிங்டின், டுவிட்டர், கூகிள், பேஸ்புக் எனப் பல மக்களைய (சமூக) வலைத்தளங்களில் இட்டுப் பரப்புகிறோம். மேலும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள், தமிழ்வெளி, இன்ட்லி எனப் பல திரட்டிகளிலும் பதிவிடுகின்றோம். இத்தனையும் செய்த பின்னும் எத்தனை வாசகரைப் பெருக்கினோம் என்றால் மிக மிகக் குறைவே!

வாசகரைப் பெருக்கிக்கொள்ள முடியாமைக்கு வலைப்பதிவர்கள் தான் காரணம் என்பேன். ஏனோ தானோ என்று எப்படியாவது பதிவிட்டால் போதுமென்று இருப்பது, பிற அறிஞர்களின் பதிவை மீள் பதிவு செய்வது, பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுதல், பிறரது பதிவுகளிலிருந்து பொறுக்கித் தமது பதிவுகளில் நுழைத்தல் போன்ற குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்.

பொறுப்புள்ள பதிவாரக மிகச் சிறந்த பதிவுகளை ஆக்கிப் பதிவிடலாம். பிறரது பதிவுகளில் இருந்து பொறுக்கிய வரிகளின் பின்னே குறித்த வலைப்பூ முகவரியை இடலாம். பிறரது பதிவை மீள்பதிவு செய்வதைவிட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அறிமுகம் செய்யலாம். எப்படியாயினும் ஏழலில் (வாரத்தில்) ஒரு பதிவு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவு அல்லது மாதத்திற்கு மூன்று பதிவு என்ற போக்கில் பதிவுகளை இடலாம். இத்தனையும் செய்தால் உங்கள் வலைப்பூ தரமானதாக மேம்படுத்தலாம். ஆனால் வாசகர் எண்ணிக்கை பெருக்கவோ பதில் கருத்துத் (Comments) திரட்டவோ முடியாது என்பேன்.

ஆமாம்! பிறரிடம் எதிர்பாரப்பதை நாமே முதலில் வழங்கினால் முடியும் என்பேன். எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றவராவார். இதுவரை 891 பதிவர்கள் அவரது தளத்தில் பதிவிட்டுள்ளனர். (சான்று : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html) அப்படியாயின் அவர் ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நாடித் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். வலைப்பூ நடத்தும் போது ஏனைய வலைப்பூக்களுக்குச் சென்று அவரவர் சிறப்பைக் கற்றுக்கொண்டு கருத்துப்பகிர வேண்டும். அப்போதுதான் சிறந்த வலைப்பதிவராக முன்னேற வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மணம் திரட்டி ஒன்றே போதும். அதே வேளை கூகிள் பிளக்கர், வேர்ட்பிரஸ் Reading List இல் இணைத்த தளங்களுக்குச் சென்று கருத்துப் பகிர்ந்தால் போதுமென நம்புகிறேன். எப்படியிருப்பினும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப் பகிர வேண்டும். அப்போது தான் எமது வலைப்பூ அறிமுகம் பலருக்குக் கிட்டும். வலைப்பூ பற்றிய நுட்பங்களை அறிய கீழ்வரும் இணைப்பை சொடுக்குக.

வலைத்தள நுட்பம் (திண்டுக்கல் தனபாலன்)

வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். புதிய பதிவர்கள் மூத்த பதிவர்களின் வழிகாட்டலின்படி முன்னேற முயற்சி எடுக்கவும். அப்போதுதான் வலைப்பூக்களூடாக உலகெங்கும் தூய தமிழ் பரப்பலாம்.

Saturday 7 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 02

ஈரேழு தீவைக் கொண்டதாலே
'ஈழம்' என்றனர் என்றேன்
பாணன் யாழ் பாடி
பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணம் என்றேன் - அந்த
யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே
எட்டுத் தீவுகள் சொந்தமாமே!

இந்திய-தமிழகமருகே
நடுக்கடலை அண்டியே கச்சதீவாம்
யாழ் கோட்டையைக் கடந்தே
பண்ணைக்கடலும் மண்டதீவுமாம்
தூரத்தே நெடுந்தீவும் நயினாதீவுமாம்
அடுத்து அனலதீவும் எழுவைதீவுமாம்
ஆங்கே பருத்தித்தீவொடு புங்குடுதீவுமாம்
பைங்கிளி என்பாளின்
கடற்கரையூரைச் சுற்றிய தீவுகளாம்!

பைங்கிளியின் வீட்டார்
பிள்ளையாரைக் குப்பிட்டாலும்
இந்துக்கள் ஆனாலும் மீன்பிடித்தே
கடலன்னை போட்ட பிச்சையிலே
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்ல
பைங்கிளியும் அகவைக்கு வந்தாலும்
மருத்துவராகப் படித்து உயர்ந்தாளே!

பைங்கிளியின் வீட்டுக்குப் பின்னே
ஆங்காங்கே பனைகள் காற்றுக்கு ஆட
அப்பாலே துள்ளிக் குதித்து ஓடி வந்த
அலைகள் வந்து மோதும் கரையாம்
இடத்தாலே கெவி மாதா கோவிலாம்
வலத்தால ஐங்கரன் கோவிலாம்
அண்டையிலே அன்னம்மா வீடும்
அயலுக்க பெருமாள் வீடும்
வீட்டு வாசல் முன்னே
பேரூந்து ஓடும் பெரும் வழியாம்!

கந்தப்புவும் செல்லாச்சியும்
அப்பனும் ஆத்தாளுமாக
பொன்னனும் வேலனும்
பைங்கிளிக்கு அண்ணன்மாராக
பைங்கிளிக்கு வலை போட்ட பொடியள்
அவளின்ர அண்ணன்மாரிட்ட உதைபட
கற்பைப் பேணி மிடுக்காக மின்னும்
பைங்கிளியின் எடுப்புக்கு நிகராக
கடற்கரையூரில் எவளுமில்லையே!
--தொடரும்--


Saturday 31 May 2014

ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி விடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.

இனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.

சிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.

வலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே! எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.

மேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.

1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே!
2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே!
3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே!
4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே!
5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே!

என் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.

Friday 30 May 2014

கைக்குக் கைமாறும் பணமே - 01


இந்திய-தமிழகமருகே
ஈரேழு தீவுகளாம்
ஈழமென்ற பெயராம் - அங்கே
யாழ் வாசிக்கும் பாணன்
யாழொலி எழுப்பி இசைகாட்டி
அரசனிடம் பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணத்தில்
வேளாண்மைக்கு பெயர் போன
ஆற்றங்கரை ஊரிலே
ஐங்கரன் என்பான் பிறந்தான்!

ஆண்டவன் படைத்த
ஐங்கரனுக்கு ஏற்ற துணையாள்
அங்கிங்கு எங்கிருப்பாளோ
பொங்கியெழும் வீரன்
ஐங்கரனுக்கு
அகவை வந்தாச்சென அறிவாளோ
காளையிவன்
வாலையை எண்ணும் அகவையிலும்
வருவாயும் அறுவடையுமாய்
பணம் பண்ணுகிறான் பாரும்!

வள்ளியும் வெள்ளியும்
அப்பனும் ஆத்தாளுமாக
சுப்பனும் சுந்தரியும்
தம்பியும் தங்கையுமாக
அன்னக்கிளியும் அப்புச்சாமியும்
அண்டையும் அயலுமாக
கிழக்கால பிள்ளையார் கோவிலும்
மேற்கால முருகன் கோவிலும்
வடக்கால நெற்செய்கையும்
தெற்கால வெங்காய விளைச்சலும்
மாரி, கோடை மாறாத
வேலையும் வருவாயுமாய்
ஐங்கரனும் மின்னுகிறான்!
--தொடரும்--

Tuesday 27 May 2014

தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி

வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.

கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம்  நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

Friday 23 May 2014

மின்நூல்கள் பயன்தருமா?

உறவுகளே! பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.

"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்?" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.

மேலும், "மின்நூல்கள் பயன்தருமா?" என நீங்கள் கேட்கலாம்.

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

இன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

Friday 16 May 2014

நீங்கள் வலைப்பூக்களில் எழுதுபவரா?

ஊடகங்களும் வெளியீடுகளும் பற்றித் தெரிந்திருப்பதோடு வாசகர் விருப்பு, வெறுப்புகளை அறிந்திருந்தால் எந்த ஊடகத்திலும் நீங்கள் எழுதி வெல்லலாம். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்ற சூழலில்
வலைப்பூக்கள் முக்கிய ஊடகமாகப் பேணப்படுகிறது. ஆயினும், தமிழைப் பேணி எழுதுவோரும் தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோரும் இருக்கிறார்கள். தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோர் தமிழில் எப்ப எழுதுவார்களோ, அப்ப தான் ஊடகங்களிலும் வெளியீடுகளிலும் தமிழைப் பார்க்கலாம். சரி, இனி வலைப்பூவில் எழுதுவோர் கற்கவேண்டிய பகுதியை பகிரலாம் என எண்ணுகிறேன்.

"தாம் எழுதுவதை தாமே பிரசுரம் செய்து கொள்ள முடிகிறது, உடனடியாக பல பேர் படிக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து கூட நமது எழுத்தைப் பற்றி எழுதுகிறார்கள்- இன்னும் எத்தனையோ காரணங்கள். நாமே ராஜா; நாமே மந்திரி." என்ற எண்ணத்துடன் வலைப்பதிவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. இந்த உண்மையை நிஷப்தம் (http://www.nisaptham.com/)  தளத்தில் 'எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?' என்ற பதிவில் அறிஞர் வா.மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவரது பதிவில் "தொடர்ந்து எழுதுவதில் சில சங்கடங்களும் இருக்கின்றன. அந்தச் சங்கடங்களை கொஞ்சம் அடையாளம் கண்டுகொண்டால் போதும்." என வழிகாட்டுவதோடு "விமர்சனங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நிராகரிக்கவும் கூடாது. பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள் என்றால் அதைப்பற்றி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு விட்டுவிடலாம். அது மண்டைக்குள் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும் போது subconscious-ல் இருக்கும் அந்த விமர்சனம் நம்மை மீண்டும் அந்தத் தவறை செய்ய அனுமதிக்காது." எனத் திறனாய்வின் சிறப்பையும் பகிருகிறார்.

ஈற்றில் "வலைப்பதிவு ஒரு நல்ல ஊடகம். கவனம் பெறுவதற்கும், நம் எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்குமான களம். எடுத்துக் கொள்கிற விஷயத்தில் சுவாரசியத்தைச் சேர்க்கத் தெரிந்தால் போதும். இங்கு நம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கலாம். சுவாரசியத்தைச் சேர்ப்பது என்பது பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. எழுத எழுத பழக்கத்தில் வந்துவிடும்." என வலைப்பூப் பதிவர்களுக்கான ஊக்கமருந்து ஒன்றையும் அவிட்டுவிடுகிறார்.

மேற்படி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவை உங்களுடன் பகிருவதால் நன்மை உண்டா? உலகெங்கும் தூய தமிழைப் பேண (http://yarlpavanan.wordpress.com/) சிறந்த வலைப்பூப் பதிவர்கள் தேவை என்பதால் அறிஞரது அறிவூட்டலைப் பகிருவதால் எனக்கு நிறைவு கிடைக்கிறது. வலைப்பூ ஊடகம் பற்றிய தெளிவோடு சிறந்த படைப்புகளை ஆக்க அறிஞரது அறிவூட்டல் உங்களுக்கும் உதவுமென நம்புகிறேன்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞரது அறிவூட்டலைப் படியுங்கள்.

எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?