Thursday 11 September 2014

சுகப்பிரியனின் சொல்லக்கூடாத உண்மை…


தமிழ்நண்பர்கள்.கொம் என்ற தமிழ்ப் படைப்புகளின் களம் என்ற வலைத்தளத்தை எவரும் மறக்க முடியாது, தமிழ்நண்பர்கள்.கொம் ஒரு தானியங்கித் திரட்டியும் கூட. நான் வலைப்பதிவர்களிடையே அறிமுகமாக அல்லது நானொரு வலைப்பதிவராக மின்ன தமிழ்நண்பர்கள்.கொம் தளமே பின்னூட்டி. நான் இன்றும் எனது வலைப்பூக்களில் வெளியிடும் பதிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் வெளியானவை தான். அந்த வகையில் 05/01/2012, வியாழன், - 10:49am அன்று வெளியான அறிஞர் சுகப்பிரியனின் "சொல்லக்கூடாத உண்மை…" என்ற கவிதைக்கு நான் வழங்கிய மதிப்பீட்டுப் பதிவை கீழே படியுங்கள்.

முதலில் அறிஞர் சுகப்பிரியனின் கவிதையிலிருந்து சில வரிகளைக் கீழே படியுங்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilnanbargal.com/node/37485

யாம் இருக்கப் பயமேன்
எடுத்து விடு நண்பா
பெண்களின் ஆடைகளில் உள்ள
பொட்டுக் கேட்டை மட்டுமல்ல
மக்களாய(சமூக)த்தின் பொட்டுக் கேட்டையும் தான்!
பெண்களே...
மக்களாய(சமூக)த்தின் கண்களே...
அருமையான அழகை பேணுங்கள்
ஆனால்
அழகற்ற உடலை அழகுபடுத்த
பொட்டுக்கள், வெட்டுகள் நிறைந்த
வலை போன்ற ஆடைகளை அணிவது
உங்கள் கற்புக்கு கேடு வருமே!
அடிப் பெண்ணே!
ஆள் பாதி ஆடை பாதி என்பது
ஆளின் அறிவை அழகுபடுத்துவது
அவ்வவ் ஆளின் செயல் பாதி
அவ்வவ் ஆள் அணியும் ஆடைகள் பாதி
(ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்)
என்றறிவீர்களா?
பிறந்த உடலை மூடிமறைக்க அமைத்த
ஆடைகளைக் கிழித்து
பிறந்த உடலைக் காட்டும்
போர்வை ஆக்கலாமா?
இத்தனை உண்மைகளை
அவிழ்த்துக் காட்டிய
அறிஞர் சுகப்பிரியனைப் பாராட்டுகிறேன்!
அறிஞர் சுகப்பிரியனின் கவிதையில்
பிறமொழிகள் புகுந்திருப்பது
தவிர்க்க இயலாத ஒன்றாயினும்
பிறமொழிச் சொல்களை
அடைப்புகளுக்குள் இட்டு - அதற்கான
தமிழ்ச் சொல்களை நேரடியாகப் பாவித்தால்
தூய தமிழ்க் கவிதையாயிருக்குமே!
சொல்லக்கூடாத உண்மை என்று
சொல்லிவைத்த அறிஞரின் எண்ணங்கள்
நடப்புக்காலத்தில் உலாவரும்
நம்ம பெண்களின் ஆடை வண்ணங்களும் - அதன்
அறுவடையாக எழும்
தமிழ்ப்பண்பாடு சீரழியும் நிலையுமே!
அறிஞர் சுகப்பிரியனின் பாடுபொருள்
நிறுத்துப் பார்க்கப்பட வேண்டிய
நல்ல படைப்புக்குச் சான்றாயினும்
இதைவிடச் சிறந்த படைப்புகளை
சுகப்பிரியனிடம் எதிர்பார்க்கிறேன்!

குறிப்பு: 05/01/2012, வியாழன், - 8:49pm அன்று தமிழ்நண்பர்கள்.கொம் இல் வெளியான " 'சொல்லக்கூடாத உண்மை…' என்ற பாவிற்கான திறனாய்வு http://tamilnanbargal.com/node/37497 " என்ற பதிவைச் சிறு மாற்றங்களுடன் மீழ்பதிவு செய்துள்ளேன்.

4 comments:

  1. ஆடை குறைப்போருக்கு சவுக்கடி வார்த்தைகள்,,,, அருமை,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி

      Delete
  2. நாகரிகம் வளர்கிறது..ஏதாவது சொன்னால்,சொன்னவர்கள் நாகரிகம் தெரியாத காட்டான்கள் அர்ஜனை கிடைக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.