Wednesday 18 February 2015

நகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை

''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
என்றொரு நகைச்சுவையை நகைச்சுவையாளி (ஜோக்காளி) தளத்தில் படித்தேன்.
அதற்கான இணைப்பு இது தான்!
http://www.jokkaali.in/2015/02/blog-post_16.html

அதனைப் படித்ததும்
இப்படிக் கருத்துப் போட எண்ணினேன்.
அதனைப் படியுங்க...

என்கிட்ட இணைப்பாளி (தரகர்) வந்தாரு
இவரு யாரு என்றார்
என் மனைவி என்றேன்
ஓட்டம் பிடித்தாரு
ஏன் தான் ஓடுறீங்க என்றேன்
உங்களுக்கு மனைவி இருக்கே
அப்ப
எனக்கு வேலையே இல்லையே
என்றாரே!
ஏன் இப்படி எழுதினேனா?
"
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
"
என்ற நகைச்சுவை இருக்கே
அதில
''அவ புருஷன் கையிலே
அது போயிடுச்சுன்னா
வம்பாயிடுமே!'' என்றிருக்கே
அதைப் பார்த்துத் தான்...

மேற்படி கருத்திட்ட பின் "எனக்குத் தெரியமல் போச்சே" என்று தலைப்பிட்டு இப்படி நானும் நகைச்சுவை எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

அழகி அரசி: இவ்வளவு நாளா உங்களைத் தொடருகிறேன். எப்பவாவது ஏனென்று கேட்டியளா?

ஒல்லிக் கில்லி: தேவை ஏதும் வரவில்லையே தோழீ!

அழகி அரசி: 1 4 3

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: I Love You

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

ஒல்லிக் கில்லி: அது தான் ஏன் என்று கேட்கிறேன்...

அழகி அரசி: நீங்க தாலி கட்டினா... நாங்க கூடி வாழலாமே

ஒல்லிக் கில்லி: "ஓடிப் போடி அங்கால; கூடி வாழ
நானிருக்கேனடி" என்று என் மனைவி கேட்டா என்ன செய்வாய்?

அழகி அரசி: உங்களுக்கு மனைவி இருக்கென்று தெரியாமல் போயிற்றே!

ஒல்லிக் கில்லி: ஒன்பது பெட்டைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்த நல்லதங்காள் தான் என் மனைவி என்று தெரியாதா?

அழகி அரசி: அடிக்கடி பத்துப் பெண்கள் உங்களைத் தொடருவாங்களே? அவங்க யாரு?

ஒல்லிக் கில்லி: இளமையான பெண்டாட்டி..
                விரைவாக வளர்ந்திட்ட பிள்ளைகள்
                எல்லோருமே என் பெண்டாட்டி பிள்ளைங்க தான்!

அழகி அரசி: என்னை மன்னிச்சிடுங்க...

ஒல்லிக் கில்லி: அதுக்காகக் குதிக்கால் தலையில அடிக்க ஓட்டம் பிடித்தால் அழகாக இருக்காது பிள்ளோய்!

எழுதி முடியப் படித்துப் பார்த்தால், அது நாடகமாகத் தானே இருந்தது. நான் முதலில நாடக உரைநடை (Script) தான் எழுதினேன். அது என்னில் தொடருதோ என எண்ணினேன். பின்னர் தான் நகைச்சுவை என்றால் நறுக்கென நாலு வரியில இருக்க வேணுமே என எண்ணினேன்.

பிஞ்சுப் பெண்பிள்ளை: உங்க தலையில கையை வைச்சுக் கொஞ்சினது பிழையாப் போச்சே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: என்னோடு பிழைக்க மாட்டீரோ?

பிஞ்சுப் பெண்பிள்ளை: இஞ்சாருங்கோ... கையெல்லாம் கறுப்பு அப்பியிருக்கே... பிஞ்சும் பழமும் இணைய முடியாதே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: இத்தனை நாள் காதலித்தீரே?

பிஞ்சுப் பெண்பிள்ளை: பிஞ்சும் பிஞ்சும் இணையும் என்றே காதலித்தேன்... நரைமுடிக்கு கறுப்படித்த கிழம் என்றதும் காதல் வரமாட்டேன் என்கிறதே!

அட... சீ! பிறகும் நாடக உரைநடை (Script) தான்... எனக்கு நகைச்சுவை எழுத வராதோ என எண்ணி நான் குழம்பியதில்லையே... அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளை  வலைப்பூக்களில் மேய்ந்தேன்... ஆளுக்கொரு நுட்பத்தில என்னமோ மூளைக்கு வேலை வைக்கிற மாதிரி எத்தனையோ அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளைப் படித்தேன்... ஈற்றில நகைச்சுவையாளி (ஜோக்காளி) பகவான்ஜி அவர்களின் நடையில எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

வாலை: ஏன்டி அந்தக் காளையை வேண்டாம் என்கிறாய்?

சோலை: அவரு காளையில்லை... பழுத்த கிழமெல்லோ...

வாலை: எப்படி, அப்படிச் சொல்லுறாய்...

சோலை: அவரு முடிக்கு அடித்த கறுப்பில கொஞ்சம் காதில அப்பியிருக்காரே...

இப்ப கொஞ்சம் நகைச்சுவை வருமாப் போலே இருக்கே... என்றாலும்  நாடக உரைநடை (Script) மணம் வீசுதே... மீண்டும் எண்ணி எண்ணி எழுத முயன்றேன்...

அழகன் ஒருவன் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே தலையும் வெள்ளையாயிற்றே...
ஓ! கறுப்படித்த தலைக்காரனோ...!

இப்படி இன்னொன்றும் எழுதினேன்.

அழகி ஒருவள் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே நீண்ட முடியும் குறுகியதோ...
ஓ! இணைச்சு வைச்ச முடிக்காரியோ...!

இவ்விரண்டையும் தான் நகைச்சுவை என நான் கருதுகிறேன். ஆனால், உங்கள் கருத்து முரண்படலாம்.. நீங்கள் தெரிவித்தால் தானே; நானென்ற சின்னப்பொடியன், பெரியாளாக முடியும்.

இப்பதிவை நகைச்சுவை எழுதப்பழக்கிற பதிவு என்று நினைத்திருந்தால் தவறு. நான் இவ்வாறு எழுத வந்த நோக்கத்தையே சொல்லி முடிக்கிறேன். அதாவது, புதிய படைப்பாளிகள் கருத்திற் கொள்ளவேண்டிய சில தேவைகளை உணர்த்தவே இதனை எழுதினேன். அவற்றைக் கீழே படிக்கவும்.

1. நாம் எழுதியது தகுதியான பதிவு என நாமே முடிவு செய்யக்கூடாது.
2. நாம் எழுதியதைத் தகுதியான பதிவாக மாற்ற அறிஞர்களின் படைப்புகளை மேய்தல் வேண்டும்.
3. அறிஞர்களின் படைப்புகளைப் படியெடுக்கக் கூடாது. படியெடுத்தால் அப்படைப்பை ஆக்கியோரது விரிப்பு வழங்கப்பட வேண்டும்.
4. அறிஞர்களின் நுட்பங்களை எவரும் கையாளலாம். ஆயினும், வாசகர்கள் கண்ணதாசன் நடையில, மூ.மேத்தாவின் நடையில எழுதுகிறாரெனக் கண்டுபிடிப்பார்கள்.
5. நாம் எழுதும் வேளை நமக்கென ஓர் எழுத்து நடையைப் பின்பற்றலாம்.
6. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுவதன் மூலமும் எம்மை அடையாளப்படுத்த முடியும்.
7. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுமுன் படைப்புகளுக்கான கோட்பாடு, இலக்கணம், இலக்கியத்தன்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
8. அது எழுத வராது... இது எழுத வராது... உது எழுத வராது... என பின்னேறாமல்; இயன்றவரை முயன்று பார்ப்போமென முன்னேற வேண்டும்.
9. பெயர் சுட்டித் தாக்குவதோ பிறரைக் குறைத்து மதிப்பிடுவதோ நல்லதல்ல. ஆளுக்கு ஆள் ஆற்றல் வேறுபடுமென உணரவேண்டும்.
10. பிறரை நோகடிக்காமல் பிறருக்கு நிறைவு தரும் வகையில் எழுதவேண்டும்.

வாசித்து முடித்த உள்ளங்களே! மேற்காணும் பத்தில ஏதாச்சும் என் பதிவில நான் பின்பற்றி இருக்கிறேனா? பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா? உங்கள் கையில் தான் இதற்கான பதிலோ முடிவோ இருக்கின்றது!