Tuesday 1 July 2014

பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!


நான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.

வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.

நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.

படைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே! அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு? ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவாரா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே! அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு? எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.

வாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே! ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.

நண்பர்களே! எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.

பதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. "பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!" என்ற தலைப்பில் இத்தனையும் "பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.

10 comments:

  1. பிரிவில்லை பேதமில்லை என்ற தத்துவத்தை அழகாக சொல்லி விட்டீர்கள்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அற்புதமான, ஆழ்ந்த விசயங்களை அழகாக எடுத்துவைத்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும்....
    nanru..
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. சரியாக... மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஆண் மூளை எடை 1.36கி,பெண் மூளை எடை 1.25கி என்று சொல்லப் பட்டாலும் செயல் திறனில் வித்தியாசம் இல்லாதது என்பதால் தங்கள் கருத்து சரியானதே !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.